RSS

நெல்லையில் ஒரு நிகழ்வு

02 ஏப்

அசின் சார், கழுகுமலை.நெல்லையில் ஒரு நிகழ்வு மார்ச் 29, புனித வெள்ளி.

மாலை 3 மணி.

தேவாலயத்தில் நடைபெறும் தியான நிகழ்வுக்கு என் மனைவி கிளம்பிக் கொண்டிருந்த பொழுது, நான் பேரா.சிவசு அவர்கள் நெல்லையில் நடத்தும், “பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும்” நிகழ்வுக்குக் கிளம்பினேன்.

நெல்லை ஜானகிராம் ஹோட்டல் அரங்கம்.

சிவசு அவர்களின் மேலும் அமைப்புடன் பேராசிரியர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.

மாலை 5 மணி.

பேரா.வேலம்மாள் அவர்களின் வரவேற்புரை தொடங்கியது. நெல்லையில் பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

பேரா.மகாதேவன் தன் வாழ்த்துரையில், “நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது நன்று. ஊடகங்களுக்கேற்ப படைப்பாளிகள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், காகிதங்கள் இல்லா நூலகங்கள் ஆகிவிட்ட காலம் இது. அந்த வகையில் கவிஞர் கல்யாண்ஜி அவர்களும், கவிஞர் சுகுமாரன் அவர்களும் புதிய தடத்தில் பயணம் செய்கிறார்கள். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் சிறந்தவர்கள். ஓய்வு பெறும் பேராசிரியர்கள் இவ்விருவரும் நல்ல மனிதராக, ஆசானாக வாழ்ந்து காட்டியவர்கள். தங்களின் பணிக் காலத்தில் மாணவர்களுக்குப் பல வாயில்களைத் திறந்து விடக் கூடியவர்களாய் இருந்துள்ளார்கள். தங்களை விட தங்களுடைய மாணவர்களை உயர்த்தி மகிழ்ந்த பெருமைக்குரியவர்கள். பேரா.கட்டளை அவர்கள் காமராசர் பல்கலைக் கழகத்தில் கழியலாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்துள்ள இவர் உ.வே.சா. போன்ற பணியை மேற்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் சுவடிக் காப்பகம் அமைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர்கள் கட்டளை ஐயாவை அணுகினால் மிகுந்த பயனுடையதாய் இருக்கும்” என்றார்.

பேரா.இராமச்சந்திரன் தனஞ்செயனை வாழ்த்திப் பேச வந்தார்.

“1987-ல் நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கியவுடன் பேரா.லூர்து அவர்கள் துறைத் தலைவர் ஆனார். அப்போது தமிழ்த் துறைக்கும் அவர்தான் துறைத் தலைவர். ஓராண்டு காலம் இருதுறைகளுக்கும் தலைவராகப் பணியாற்றினார். அன்றிருந்தே பேரா.தனஞ்செயன் பணியாற்றி வருகிறார்.

நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் உருவானதற்கு பேரா.நா.வானமாமலைக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், நாட்டார் வழக்காற்றியல் குறித்த ஆய்வுகளை அன்றவர் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பேரா.லூர்து அவர்கள் தாம் எழுதிய கட்டுரைகளைத் திருத்தி வாங்க அவரிடம் சென்றார். அவருடைய உரையாடலால், அவரிடம் எடுத்த பயிற்சியால், நாட்டார் வழக்காற்றியல் புலம் சேசு சபை குருக்கள் துணையோடு தூய சவேரியார் கல்லூரியில் உருவானது. சிலர் இதை கொட்டடிக்கிற துறை என்பார்கள். ஆனால், இத்துறை வழக்காறுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதாக இருந்தது. மொழியியல், வழக்காற்றியல், மானிடவியல், பண்பாட்டியல், அமைப்பியல் போன்றவற்றைப் பாடமாக வைத்து சொல்லிக் கொடுத்தது.நெல்லையில் ஒரு நிகழ்வு பேரா.லூர்து அவர்கள் இத்துறைக்கென ஒரு நூலகத்தை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தார். ஒருவருக்கு ஏற்படும் சந்தேகத்தை மற்றொருவரிடம் கேட்டு விவாதித்து இருக்கிறோம். அப்போது எங்களிடையே முரண்பாடுகளும் உண்டு. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தறிந்தோம். ஏனெனில், அமைப்பியலோ, மொழியியலோ அவ்வளவு எளிதானதல்ல.

அமெரிக்காவிலிருந்து போர்டு பவுண்டேசன் பண்ட் வந்தது. அதைத் தொடர்ந்து பாளை, கொடைக்கானல், திரிச்சூர் போன்ற இடங்களில் உலகளாவிய பட்டறைகள் நடத்தப்பட்டன. அதே போல பின்லாந்திலிருந்து இங்கு வந்து வகுப்பெடுத்து இருக்கிறார்கள். இக்கூட்டு செயல்பாடுகளுக்குப் பேரா.லூர்து அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

1996-ல் பேரா.லூர்து அவர்கள் விட்டுச் சென்றதை, பேரா.தனஞ்செயன் நம்பிக்கையோடு துறைத் தலைவராக இருந்து பணியாற்றி வந்திருக்கிறார். எப்போதும் படிப்பதும் எழுதுவதுமாக இருக்கும் இவர், 32 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். “குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்” என்ற நூலில் சுறாமுள் வழிபாட்டை ஆய்வு செய்துள்ளார். “நிகழ்த்துக் கலைஞர்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் நிகழ்த்துக் கலைஞர்களுக்குரிய பிரச்சனைகளை ஆய்வு செய்திருக்கிறார். அதிலுள்ள பூம் பூம் மாட்டுக்காரர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை ஏதென்ஸில் வாசித்தளித்துள்ளார். “ஆவணப் படங்களும் கோட்பாடுகளும்” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

இவரின் பணி நிறைவுக்குப் பின், வருகைதரு பேராசிரியராகப் பணியாற்ற பல்கலைக் கழகம் அழைத்துள்ளது இன்னுமோர் மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.

தொடர்ந்து, கவிஞர் கல்யாண்ஜி கவிதை வாசிக்க வந்தார்.

நிகழ்ச்சி மிகச்சரியாக ஐந்து மணிக்குத் தொடங்கியதை திருநெல்வேலியில் எப்போதாவது நடக்கும் ஆச்சர்யமாக விளித்தவர், ‘மேலும்’ அமைப்பைப் பாராட்டினார்.நெல்லையில் ஒரு நிகழ்வு “தயவு செய்து எல்லோரும் ‘மேலும்’ என்ற சொல்லை உச்சரித்துப் பாருங்கள். எனக்கு முன் இருக்கிற சிறு குழந்தைக்கு மேலும் ஒரு பிஸ்கட் தேவைப்படலாம். என்னுடைய மனைவிக்கு மேலும் கொஞ்சம் தாமிரபரணித் தண்ணீர் வராதா என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். என்னைப் போன்ற படைப்பாளிகள் மேலும் ஒரு கவிதை எழுதிவிட மாட்டோமா என்று நினைக்கலாம். இப்போது ‘மேலும்’ என்ற ஒற்றைச் சொல்லோடு இங்கு நிற்கிறேன்.

பேராசிரியர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடைவெளி உண்டு. அதைக் குறைப்பதில் சிவசு 51 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். நான் அதிகம் வெளியில் செல்லாதவன், மேடைகளில் பேசாதவன். சிவசு, என்னை கை பிடித்து கூட்டிச் செல்கிறார். கைகளைப் பிடித்துச் செல்வது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

கவிதை வாசிப்பு நிகழ்வு மலையாளத்தில் உண்டு. கவிதையை எழுதியவரே வாசிப்பது திருநெல்வேலியில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். கவிஞர் சுகுமாரன் முன்னால் சற்று கூச்சத்தோடு என் கவிதைகளை வாசிக்கிறேன்.

மல்லிகை பூக்கும், மாம்பூ பூக்கும், தேக்கும் பூக்கும்.

“தேக்கும் பூக்கும்” அவ்வளவு தான் கவிதை.

பெருமாள் நகர் புறநகர்ப் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது நெடிய தேக்கு மரங்களைப் பார்க்கிறேன். சுவர்களுக்கு வெளியே தேக்குச் சருகுகள் உதிர்ந்து கிடப்பதைக் காண்கிறேன். முதிர்ந்த தேக்கு இலைச் சருகுகளில் மழைத் துளி விழும் போது எழும் அதிர்வுகள்; தென்னை ஒற்றைக் கிடுகு ஆடும் போது வரும் ஓசை – இவற்றை என்னைப் போன்றவர்கள், சுகுமாரன் போன்றவர்கள் அடுத்த நாள் கவிதையாக எழுதி விடுகிறோம்.

‘தேக்கு’ உறுதிக்குச் சொல்கிறோம்.

“தேக்கும் பூக்கும்” இது இன்னும் நெறைய சொல்கிறது.” என்றவர் தொடர்ந்து அவருடைய கவிதைகளை வாசித்தார். அரங்கம் அமைதியாகக் கேட்டதைக் கண்டு பாராட்டினார்.

இலக்கியங்களின் போக்கு பற்றி கவிஞர் சுகுமாரன் பேசும்போது, “மலையாள இலக்கியத்தை வரலாற்று மாணவனைப் போல ஆய்வு செய்து கூறினார். நவீனத்துவம், பின் நவீனத்துவம், ரசனை சார்ந்தவை, பெண்ணியம் என்று பகுத்துப் பார்த்தார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் படைப்புகளை மறுமலர்ச்சிக் காலகட்டமாகக் கூறினார். வைக்கம் முகமது பஷீர் தந்த புதுமை மாற எழுத்துக்களையும்; சக்கரியா தந்த புதுமையான நடையையும் குறிப்பிட்டவர், எண்பதுகளில் இருந்து மலையாள இலக்கியங்களில் நவீனத்துவம் வலுவிழந்தது” என்றார்.நெல்லையில் ஒரு நிகழ்வு மீடியாக்களில் உள்ளவர் என்பதால், அது குறித்து சிவசு வினவியதற்கு, “மீடியாக்கள் பற்றிய அடிப்படை அறிவு தமிழ் மீடியாக்களுக்கு இல்லை. மீடியா செயல்பட குறைந்த பட்ச சுதந்திரம் வேண்டும். அது மலையாளத்தில் இருக்கிறது, தமிழில் இல்லை” என்று பதிலுரைத்தார்.

தொடர்ந்து, பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரின் ஏற்புரையுடன் விழா சரியாக 8 மணிக்கு நிறைவுற்றது.

அக இருளகற்றும் பேராசிரியர்களோடும், சமூகத்திலுள்ள அவலங்களையும் அழகியலையும் சுட்டிக்காட்டும் படைப்பாளிகளோடும் எனது ‘புனித வெள்ளி’ முடிந்தது.

அரங்கத்தை விட்டு வெளிவரும் போது, படைப்பாளிகளின் ஏக்கமும் சிலுவைப் பாடுகளின் ஏக்கமும் ஒன்றெனப் பட்டது.

வீடு திரும்பிய போது இன்றைய தியான சிந்தனை நன்றாக இருந்தது என்றாள் என் மனைவி.

நானும் அதையே சொன்னேன்.

* * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *     * * *    * * *    * * *   * * *   * * *   * * *   * * *

தொடர்புடைய பதிவுகள்:

‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

பொதிகை அடிவாரத்தில் முஸல் பனி

 

2 responses to “நெல்லையில் ஒரு நிகழ்வு

  1. DR.S.MAHADEVAN

    02/04/2013 at 11:07 பிப

    அய்யா தங்களின் வலைப் பூ சிறப்பாக உள்ளது. மேலும் நிகழ்வை ஆவணமாக்கி உள்ளீர்கள். அருமையான நடை.
    தங்கள் முயற்சிக்கு அன்பின் வாழ்த்துக்கள்.
    மகாதேவன்

     
  2. மதுரை வாசகன்

    07/04/2013 at 12:31 பிப

    வண்ணதாசன், சுகுமாரன் உரையை, கவிதையை அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி. மேலும்’ இதுபோன்ற நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

     

பின்னூட்டமொன்றை இடுக