RSS

லோனாவாலா – பாஜா குகைகள்

12 அக்

“கழுகுமலை” மா.சட்டநாதன், மும்பை.கர்லா அடிவாரத்தில் இருந்து, வந்த வழியே திரும்பி ரோட்டைக் கடந்து ஒரு சிறு கிராமத்தின் வழியே இந்திரயாணி நதியைத் தாண்டினால் மாளவ்லி ரயில் நிலையத்தை அடைகிறோம். அங்கிருந்து மும்பை – புனே விரைவு நெடுஞ்சாலையை சிறு மேம்பாலம் மூலம் கடந்தால், மீண்டும் ஒரு சிறுகிராம சாலை மூலம் பாஜாக் குகை அடிவாரம் வரை வந்து விடலாம். மோசமில்லாத நல்ல சாலைதான்.

நான் சென்ற போது நல்ல மழை. சுற்றிலும் சஹயாத்ரி மலைத்தொடர். அங்கங்கே கொட்டும் சிறு அருவிகளுடன், பளீரென்று கழுவி விடப்பட்ட குகைகள் எனப் பரவசம் தரும் சூழல். இந்த இடத்திற்கு கல்லூரி மாணவ மாணவியர் ட்ரெக்கிங் வருகிறார்கள். பாஜா அடிவாரத்தில் விழுகின்ற சிறிய நீர் வீழ்ச்சியில் குளிக்கிறார்கள். மும்பை, புனே வாசிகளுக்கு அருகிலேயே அருமையான ஒரு பிக்னிக் ஸ்பாட்.பாஜாக் குகைகளின் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு. எல்லாம் மேற்கு பார்த்த குகைகள். அதனாலேயே மாலையில் இந்தக் குகைகளைப் பார்க்க பரிந்துரைக்கின்றனர்.சூரிய ஒளி நேரடியாக குகைகளுக்குள் விழுவதால் நுட்பமான வேலைப்பாடுகளும் நன்கு தெரிகின்றன. முன்புறம் பரவிக் கிடக்கும் வெட்டவெளி, சைதன்யத்தை துல்லியமாக எடுத்துக் காட்டி பிரமிக்க வைக்கிறது. சைதன்யத்தின் உட்புறம் எளிமையான எண்கோணத் தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள் வட்ட கூரை, கர்லாக் குகை போன்றே இங்கேயும் மர வளைவுகள். ஆனால், வெளிப்புறம் சாளரங்கள் போன்ற அழகிய வேலைப்பாடுகள்.துறவிகள் தண்ணீர் குடிக்க என்றிருக்கும் அமைப்புகள், தங்குவதற்கான சிற்றறைகள் எனப் பொதுவான குகைகள் போன்று இருந்தாலும், பாஜாக் குகைகளின் சிறப்பு – அங்கிருக்கும் சிற்பத் தொகுதிகள். யவன வணிகர்(பிரமுகர்), நான்கு குதிரைகள் மீது, தன்னிரு துணைவர்களுடன் வரும் தலைவன், யானை மீது அமர்ந்து வரும் கந்தர்வன்.அவனுக்கு கீழே ஒரு பெண் தபேலா வாசிக்க, மற்றொருத்தி நடனமாடும் சிற்பமானது, இந்தியாவில் 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தபேலா என்னும் இசைக் கருவி இருந்து வருவதை நமக்குத் தெரிவிக்கிறது.இங்கிருக்கும் இன்னொரு விநோதம் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் கல்லினாலான 14 ஸ்தூபிகள். சாஞ்சியிலும் மகா ஸ்தூபிக்குப் பின்புறம் நிறைய புத்தத் துறவிகளின் ஸ்தூபிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை தனித்தனிக் கோவில்களைப் போன்றவை. பாஜாவிலோ இவை ஒரு சிறு குகைக்குள் ஒன்பதும், குகைக்கு வெளியே ஐந்துமாக நெருக்கமாக உள்ளன. ஸ்தூபிகளின் அமைப்புகளிலும் வேறுபாடுகள் உள்ளன. விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை.மொத்தத்தில் கர்லா, பாஜாக் குகைகள் தவற விடக்கூடாதவை என்பதில் ஐயமில்லை. லோனாவாலாவில் ஒரு முழு நாளையும் செலவிட இடங்கள் உண்டு. ஆகையால், லோனாவாலாவிற்கு ஒருநாள், இந்த குகைகளுக்கு அரை நாள் என்ற அளவிலாவது ஒதுக்கி நல்ல முறையில் பாருங்கள்.இந்த முறை குகைகளை மட்டும் மனதில் வைத்துச் சென்றதால், லோனாவாலாவை முழுமையாக என்னால் சுற்றிப் பார்க்க முடியவில்லை. அது ஒரு கோடை மலைவாச ஸ்தலம். வழக்கம் போல நம்ம ஊர் வெயிலைத் தாங்க இயலாத வெள்ளைக்கார துரைகளால் கண்டறியப்பட்டது. மீண்டும் அங்கே செல்ல ஒரு திட்டம் இருக்கிறது. விரிவான தகவல்களுடன் லோனாவாலாவைப் பற்றி அப்போது எழுதுகிறேன்.

 

பின்னூட்டமொன்றை இடுக